Published Date: December 15, 2025
CATEGORY: CONSTITUENCY

ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கியத் திருவிழா போன்று மதுரையில் இலக்கிய திருவிழா நடத்துவது தொடர்பான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற சர்வதேச இலக்கியம் மற்றும் கலை விழா நடைபெற்று வருகிறது. அதைப் போன்று தமிழர்களின் கலாச்சாரம், மதுரையின் பாரம்பரியம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பிரபலப்படுத்த மதுரை இலக்கிய திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விழாவில் இலக்கியம், அரசியல், அறிவியல், கலைகள் எனப் பல்வேறு துறைகளில் இருந்து பிரபல பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர். மேலும், தமிழக பாரம்பரிய இசை கச்சேரிகள் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன. இத்திருவிழா திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்தார். அவர் இலக்கியத் திருவிழா குறித்து தொடர்புடைய அலுவலர்கள், தொழிலதிபர்கள், தமிழ் அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஜனவரி இறுதியில் இலக்கியத் திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Media: Hindu Tamil